A visit to the Book Fair

ஜனவரி 11 முதல் 23 வரை நந்தனம் YMCA மைதானத்தில் நடந்து முடிந்தது இந்த வருட புத்தகக் காட்சி. பள்ளியில் report சமர்ப்பிப்பது போல் அனைத்து  பதிவர்களும் தங்கள் அனுபவங்களை பதிந்து விட்டனர். சில சொந்த பணிச் சுமை காரணமாக ( சோம்பேறித்தம்னு புரிஞ்சிக்கணும்…!) அப்பொழுது பதிவு எழுத இயலவில்லை. better late than never..  ஆதலால் அந்த பதிவு இப்பொழுது.

என்றோ சிறு வயதில் தந்தையுடன் சென்ற நினைவு, இணையம் நுழைந்து இலக்கியம் நுகர தொடங்கியப்பின் நான் சென்ற முதல் புத்தகக் காட்சி. நண்பர் கருப்பையாவின் அறிவுரையின் படி முதல் நாள் வேடிக்கை பார்க்க மட்டுமே சென்றேன். ஒவ்வொரு பதிப்பகமாக சென்று அனைத்தையும் பார்த்து வியந்து அந்த விஸ்தாரத்தை பிரமிப்பை உள் வாங்குவதே பெரிய விஷயமாக இருந்தது.
நிறைய வாசித்திருந்தாலும் என்னிடம் சொந்தமாக உள்ள புத்தகங்கள் வெகு குறைவு. முன்பே குறிப்பிட்டது  போல் என் இலக்கிய அனுபவம் மிகவும் குறுக்கியது. அதில் நான் கேள்விபட்டு வாசிக்க வேண்டும் என்று எண்ணிய புத்தகங்களும், ஏற்கனவே வாசித்து என்னிடம் இருக்க வேண்டுமென எண்ண வைத்த புத்தகங்களை மட்டுமே வாங்கினேன்.
//வாருங்கள் எனது தமிழ் இலக்கிய தேடலில் ஒன்றாய் பயணிப்போம்!//என முதல் பதிவில் குறிப்பிட்டாலும் அதன் நீட்சியாக எதுவுமே செய்யவில்லை. இனியேனும் வாங்கிய புத்தகங்களை வாசித்து அவற்றை பற்றிய சிறு அறிமுகத்தை உங்களுடன் பகிரலாம் என முடிவு செய்துள்ளேன்.
நான் வாங்கிய புத்தகங்களும், அதற்கான காரணமும் உங்கள் பார்வைக்கு!
பாரதியார் கவிதைகள்
பாரதியின் கவிதைகளை அவர் பிறந்த நாளில் சாதாரணமாக படிக்க தொடங்கி .. ரொம்பவே ஈர்த்துவிட்டது. அவரின் முழு படைப்பையும் ஆழ்ந்து நுகர…
புதுமைப்பித்தன் சிறுகதைகள்
தமிழ் எழுத்துலகில் நிகவீனத்துவத்தின் முன்னோடியின் வாசிக்க தவறிய படைப்புகளை படிக்க…
மௌனி படைப்புகள்
இலக்கியத்தின் உச்சம், எழுத்தாளர்களுக்கு எழுதுபவர் என பலரும் புகழ கேட்டிருக்கிறேன். மொத்தம் 24ன்கே கதைகள் எழுதியவர் ‘சிறுகதையின் திருமூலர்” ஆனதெப்படி என்று அறியும் ஆவலில்…
கோபல்ல கிராமம்
கோபல்லபுரத்து மக்கள்
தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
வயது வந்தவர்களுக்கு மட்டும் – கி. ராஜநாராயணன்.
ஒன்று சாகித்திய அகாதெமி விருது வாங்கியது, மற்றொன்று தமிழின் சிறந்த 10 நாவல்களில் இடம்பெற கூடியது. உன்னத கதைசொல்லியாக தமிழின் தவிக்க முடியாத இலக்கிய ஆளுமையின் படைப்பை, கரிசல் மண்ணின் வாசத்தை உணர.. கடைசி புத்தகம் வயசு கோளாறு…!! :-p
பாண்டவர் பூமி (பாகம் 1,2,3) – கவிஞர் வாலி
அதிகமாக உரைநடையில் எழுதினாலும் என்னை கவிஞனாகவே கருதுகிறேன். தெரிந்த விஷயங்களையும் எதுகை மோனையுடன் எடுப்பாக சொல்வதெப்படி என மானசீகமாக கற்கவும், விகடனில் வாசித்து வியந்த படைப்பை சொந்தமாக்கவும்…
தண்ணீர் தேசம் – வைரமுத்து
கவிஞரின் ஆக சிறந்த படைப்பாக நான் கருதுவது இதைத்தான்.
உடைந்த நிலாக்கள் ( பாகம் 2,3) – பா விஜய்.
அவசர கதியில் முதல்முறை வாசிக்க நேர்கையிலேயே மிகவும் பாதித்த படைப்பு. (மூன்றாம் பாகம் படித்ததில்லை, முதல் பாகம் விற்று தீர்ந்திருந்தது)
ரூபாயியத் – ஒமர் கயாம்
ஒமாய் கயாம் பற்றி கேள்வி படாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். உலக புகழ் பெரும் அளவிற்கு அவரது படைப்பில் என்ன மாயம் இருக்கிறதென கண்டறியும் முயற்சியில்…
ஆலாபனை
தட்டாதே திறந்திருக்கிறது – கவிக்கோ அப்துல் ரகுமான்
கவிக்கோவின் பித்தன் படித்து அவர் வரிகளுக்கு பித்தன் ஆகி விட்டேன். கிடைத்த தலைப்புகளில் என்னை ஈர்த்தவை…
அருந்தப்படாத கோப்பை
இடமும் இருப்பும்
இதற்கு முன்பும், இதற்கு பின்பும் – மனுஷ்ய புத்திரன்
மிக சமீபமாக தான் இவரை வாசிக்க தொடங்கினேன். நீராலானது வாசித்ததுமே அவர் கவிதைகளின் தனித்துவமும் நிறைந்திக்கும் ஆழமும் அர்த்தமும் கவிஞனாக நான் பயணிக்க வேண்டிய தூரம் அதிகமென உணர்த்தி கொண்டே இருக்கிறது. அவரை சந்தித்து கையொப்பம் பெற இயன்றது என் பாக்கியம்! :) (இவரின் “என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்” கிடைக்கவில்லை:( )
குழந்தைகள் நிறைந்த வீடு
என்னைச் சந்திக்க கனவில் வராதே
அ’னா ஆவன்னா
பால காண்டம்
அணிலாடும் முன்றில்
கிராமம் நகரம் மாநகரம்
பட்டாம்பூச்சி விற்பவன். –  நா.முத்துக்குமார்.
இவரின் எழுத்துக்கு நான் அடிமை வேற என்ன சொல்ல???
The Quran
பா.ராவின் நிலமெல்லாம் ரத்தம் படித்ததுமே இஸ்லாம் பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் மேல்லோங்கியது. எளிய ஆங்கிலத்தில் கிடைக்கவே நானே வாசித்து அறிந்து கொள்ளும் முயற்சியில்…
சின்மயி விவகாரம் – மறுபக்கத்தின் குரல் – மாமல்லன்.
உண்மையை நிலைநாட்ட அவர் எடுத்து வரும் முயற்சிகளுக்கு என்னாலான சிறு உதவி.
ஹைக்கூ – ஒரு புதிய அறிமுகம் – சுஜாதா.
நான் எழுதும் இரண்டு வரி கவிதைகள் அனைத்தும் ஹைக்கூ என்ற எண்ணத்தில்தான் இருந்தேன் பல நாட்களாக. ஹைக்கூ என்பது வேறு ஒரு சங்கதி என அறிய நேர்கையில் அதையும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வம். வாத்தியார விட்டா சொல்லித்தர வேற யார் இருக்கா??
அப்படியே, புத்தக்காட்சிக்கு எதிரில் இருந்த பழைய புத்தக கடையில்“Freedom at Midnight” மற்றும் “The Argumentative Indian” வாங்கினேன்.
ஒவ்வொன்றாய் வாசித்து முடித்ததும், சிறு அறிமுகத்துடன் வருகிறேன் நண்பர்களே…!

One response

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *